தேடல் தொடங்கியதே..

Thursday 31 October 2013

கீழக்கரையில் 'பயணிகள் நிழற்குடை' நிறுவப்பட பொதுமக்கள் வேண்டுகோள் ! (மறு பதிவு)

கீழக்கரையில் இருந்து தினமும் இராமநாதபுரம், ஏர்வாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் பேருந்தில் பயணிக்கின்றனர். இவர்கள் தவிர பள்ளி செல்லும்  மாணவ, மாணவியர், சிறுவர்கள், மருத்துவ மனைக்கு செல்ல குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்மணிகள், முதியவர்கள் என ஏராளமானோர், சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து வாடி வதங்குகின்றனர்.

கீழக்கரையில் ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள், பஞ்சாயத்து அலுவலகம்,  வி.ஏ.ஓ., அலுவலகம், அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் பல இயங்குகின்றன. சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு பணி காரணமாக  கீழக்கரை வந்து செல்கின்றனர். கீழக்கரை நகருக்குள் (பழைய பஸ் ஸ்டான்ட், கடற்கரை வரை) மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் வருகிறது.  

இவர்களுக்கு நிழலில் ஒதுங்கி அமர்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், சாலைகளின் ஓரத்தில், நிழலை தேடி  ஒதுங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தங்களின் நிலையை உணர்ந்து, நகராட்சி நிர்வாகம் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம் கேட்ட போது " பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  பயணிகள் நிழற்க் குடை விரைவில் அமைக்கப்படும். இதற்கான தீர்மானம் நகர் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி ஆணையரின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

(குறிப்பு : இது கடந்த 09.04.2012 அன்று சொன்னது... இன்னும் காத்திருக்கிறோம்... நிழலை தேடி !)

சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்தோ, நகராட்சி  நிர்வாகம் சார்பிலோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நன்கொடை மூலமாகவே பயணிகள் நிழற்குடையை அமைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Wednesday 30 October 2013

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி - விபத்தை தடுக்க 'பத்து' பொன் விதிகள் !

கீழக்கரை -  இராமநாதபுரம் சாலையில் நேற்று (29.10.2013) மாலை 5.30 மணியளவில் நடை பெற்ற இரு சக்கர வாகன விபத்தில், கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்த மாணவர். கருணாகரன் (திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்) உயிரிழந்தார். வாகனத்தை ஒட்டி வந்த அதே ஊரை சேர்ந்த, இவரின் நண்பர் பழனி இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் ஏதும் அணியவில்லை எனத் தெரிகிறது.

திருப்புல்லாணி உப்பளம் அருகே இவர்கள் வரும் போது, தூத்துக்குடியில் இருந்து மன்னார்குடிக்கு உரம் ஏற்றி சென்ற லாரி, டூவீலரில் மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த கருணாகரன் தூக்கி வீசப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கல்லூரியில் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


இது போன்ற இரு சக்கர வாகன விபத்தில் இறப்பவர்கள் பலரும், டூவீலரில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தான். அவர்கள் பெரும்பாலும் பின்னந்தலையில் அடிபட்டுத்தான் இறக்கின்றனர். இதற்கு காரணம் பின்னால் வரும் வண்டி மோதினாலோ அல்லது இடித்துக் கொண்டு சென்றாலோ விழும் போது, உடல் பின்நோக்கித்தான் செல்லும். அது உடல் இயல்பு. அறிவியல் உண்மை. அவ்வாறு திடீரெனெ தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபடும் போது இரத்தம் தலைக்குள்ளேயே சிந்தி உறைந்து போகிறது. 

இதன் விளைவாய் உடனடி மரணமும், பல நேரங்கள் கோமா ஸ்டேஜுக்கு சென்று அவர்கள் குடும்பம் கையில் வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் கரைத்த பிறகு, சப்தமில்லாமல் 'விதியின் வெற்றி'யுடன் இறந்து போகிறார்கள். சிலர் பிழைத்துக் கொள்கிறார்கள். சிலர் வருடக்கணக்காக படுக்கையில் படுக்கிறார்கள். ஆகவே தலையில் ஹெல்மட் அணிந்திருந்தால் இது போன்று விபத்துக்கள் ஏற்படும் வேளைகளில் தலையில் காயம் ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.


நாம் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய பத்து பொன் விதிகள் :

1. சொந்த வாகனத்தை விடுத்து அடுத்தவர்கள் வாகனத்தை ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நம் வாகனம்.. நம் சொல் கேட்கும். அதனை கட்டுப்படுத்துவது எளிது.  

2. உள்ளூருக்குள் வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியாவிட்டாலும், இராமநாதபுரம் செல்லும் போதாவது அவசியம் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். 

3. உள்ளூர் சாலைகளில் 30 கி.மீ. வேகத்திற்கு குறைவாகவும், கீழக்கரை - இராமநாதபுரம் சாலைகளில் 70 கி.மீ வேகத்திற்கு மிகாமலும் வாகனம் ஓட்டுவது, நல்ல கட்டுப்பாட்டை தரும். ஏனெனில் நம் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்கள் திடீரென சாலையின் குறுக்கே  பாய்வதால், வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மித வேகம் நல்லது.

4. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது அறவே கூடாது. நாம் மது அருந்தா விட்டாலும், கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் வழி நெடுக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதால், இங்கு குடித்து விட்டு வாகனம் ஒட்டி வரும் குடி மகன்களை கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கையாக வாகனம் ஓட்ட வேண்டும். 

5. முறையாக சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவதை கற்றுக் கொள்ள வேண்டும்.

6. செல் போனை சைலண்ட் மோடில் வைத்து விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய பழகிக் கொள்வது நல்லது.

7. ஒரு வேலை அவசியமாக பேச வேண்டும் என்றால், சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு பேசுங்கள். 

8. ஒவ்வொரு முறையும் ஹாரன், பிரேக், ஹெட் லைட், இண்டிகேட்டர், டயரில் உள்ள காற்று அளவு உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என சரி பார்த்து விட்டு பயணத்தை துவங்க பழக வேண்டும்.  

9. கீழக்கரையில் இருந்து செல்லும் போது முக்கு ரோடு, சதக் ஆர்ச், முனிய சாமி கோவில், வண்ணாந்துறை வளைவு, தோணிப் பாலம் வளைவு, திருப்புல்லாணி வளைவு,  பாலகரை வளைவு, ஆர்.எஸ் மடை வளைவு உள்ளிட்ட விபத்துகள் அதிகம் நடைபெறும் ஆபத்தான பகுதிகளில் அடுத்த வாகனங்களை, அசுர வேகத்தில் முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். 

10. அதி முக்கியமாக வாகனம் ஓட்டும் முன்னதாக இறைவனை வேண்டி விட்டு, நம் அன்பு பெற்றோர்கள், மனைவி மக்களை மனதில் வைத்து பயணத்தை துவங்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் எதிர்பாராத விபத்துகளில் இருந்து பாதுகாப்பானாக.. 

கீழக்கரை பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு - 'டெங்கு' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் நில வேம்பு கசாயம் !

கீழக்கரையில் தற்போது எங்கு நோக்கினும் மலேரியா, டெங்கு, மர்ம காய்ச்சல் என்று பல்வேறு விதமான முடக்கிப் போடும் காய்ச்சல்கள் வலம் வருகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் முதல் இராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகள் நோயாளிகள் கூட்டத்தால் நிரம்பி வருகிறது. இதனால் கீழக்கரை பகுதியில் 'டெங்கு' தீவிரத்தை தடுக்க, கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில், செயல்பட்டுவரும் சித்த மருத்துவ பிரிவில் "நிலவேம்பு' கசாயம் கொடுக்கும் முறை, கடந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. 


இது குறித்து நம்மிடையே பேசிய சித்த மருத்துவர் (பொறுப்பு) பிரபா அவர்கள் கூறும் போது "கீழக்கரை சித்த மருத்துவ பிரிவு வளாகத்தில் எல்லா நாள்களிலும், காலை 8 மணி முதல் 12 மணி வரை நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நிலவேம்பு சாயத்தை குடிப்பது நல்லது. இங்கு கசாயம் தவிர நிலவேம்பு பொடியும் தருகிறோம். வீடுகளில் நீங்களே காய்ச்சி குடித்து நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்." என்று தெரிவித்தார்.



கடந்த 2012 ஜூனில் டெங்கு பாதிப்பை தடுக்க, நிலவேம்பு கசாயத்தை அரசே பரிந்துரை செய்தது. அதனை தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கொடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் "டெங்கு' பீதி தொற்றியுள்ளதால், தமிழகமெங்கும் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் 'நிலவேம்பு' கசாயம் வழங்கும் முறை துவங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. "டெங்கு' காய்ச்சல், குழந்தைகளை குறிவைக்கும் நோய் என்பதால், குழந்தைகளுக்கு கட்டாயம், நிலவேம்பு கசாயம் கொடுப்பது நல்லது. மேலும் பால் கொடுக்கும் தாய்மார்களும், கசாயம் குடிப்பதால், குழந்தையின் நலன் பாதுகாக்கப்படும். 

Tuesday 29 October 2013

மதுரையில் இதய நோயாளிக்கு 'O POSITIVE' இரத்தம் தேவை - உதவுங்கள் நண்பர்களே !

மதுரை பரவை பகுதியை சேர்ந்த, 59 வயதுள்ள ஆரோக்கிய தாஸ் (சப் இன்ஸ்பெக்டர் - ஓய்வு), இதய நோயால் பாதிக்கப்பட்டு, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எதிர் வரும் 05.11.2103 அன்று 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால் O' POSITIVE இரத்த வகை 4 யூனிட்டுகள் தேவைப்படுகிறது.

  
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும், இரத்த தானம் செய்ய விரும்பும் நண்பர்கள் உடனடியாக  தங்கள் வருகையை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :      

ஆரோக்கிய தாஸ்  - 9942493666
   பவுசுல் அமீன்  - 9791549222

           "இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்"  

கீழக்கரையின் அமானுஷ்ய பக்கமா..? 'அஞ்சு வாசல் கிட்டங்கி' ! (சரித்திரப் பகுதி - 2)

கீழக்கரையின் அமானுஷ்ய பக்கமாய் தற்போது காட்சி தரும் இந்த அஞ்சு வாசல் கிட்டங்கி வளாகத்திற்குள், கடந்த 1967 ஆம் ஆண்டு காலக் கட்டம் வரை, முன்னாள் தமிழக முதலமைச்சர் முதல், அப்போது இருந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் வரை, இங்கு ஆஜராகாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு இந்த கிட்டங்கி, கீழக்கரை நகரின் முக்கிய வணிக தளமாக விளங்கி வந்துள்ளது. ஊர் போற்றும் பெரிய மனிதர்கள் எல்லாம் வலம் வந்த இடமாக இருந்துள்ளது. 

அதற்கு ஒரு உதாரணமாக கடந்த 1950 ஆம் வருட கால கட்டத்தில், இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியின் பிரதான தலை வாசல் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், நம் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இன்றும் சாட்சியாக இருக்கிறது.


(இடமிருந்து வலமாக) SVM.செய்யது காசீம், SVM.முஹம்மது ஜமாலுதீன், இராமநாதபுரம் கலெக்டர் அம்பா சங்கர், ஆனா சீனா சேகு மதார் அம்பலம், முன்னாள் தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் (இங்கு வரும் போது தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்துள்ளார்), AMS.அஹமது இபுறாஹீம் (பின்னால் கருப்பு தொப்பி அணிந்திருப்பவர், இராமநாதபுரம் இராஜா சண்முகநாத சேதுபதி, கானா. ஆனா. மூனா. மௌலா முஹைதீன், கடைசியாக நிற்கும் மூன்று பேர்களின் விபரம் தெரியவில்லை. இவர்கள் கலெக்டர் அம்பா சங்கருடன் வந்திருந்த உயர் அதிகாரிகளாக இருக்கலாம்

பின் வரிசை நடுப்பாகத்தில் (இடமிருந்து வலமாக) முதல் நபர் குறித்த விபரம் இல்லை, அஞ்சு வாசல் பண்டக சாலை மேனேஜர், முஹம்மது அப்துல் ரஹ்மான் சாஹிபு (நடுவே உயரமாக வெள்ளை தொப்பி அணிந்திருப்பவர் - அலி பாட்சா மாமா அவர்களின் தந்தையார்), SVM கணக்குப் பிள்ளை

பின் வரிசையில் (இடமிருந்து வலமாக) ஜகுபர், ஹபீப் முஹம்மது (சேர்மன் சேகு அப்துல் காதர் மைத்துனர்), உலகு ஆசாரி ஆகியோர் நிற்கின்றனர். அப்போதும், இப்போதும் இந்த கிட்டங்கி SVM வகையறாக்களின் பூர்வீக சொத்தாக இருந்து வருகிறது.

இந்த புகைபடத்தில், பல முக்கியஸ்தர்களுடன் கீழக்கரையில் கலை நுணுக்கமான தேக்குமர வேலைப்பாடுகளை செய்த உலகு ஆசாரி அவர்களும் இடம் பெற்றிருப்பதை பார்க்கும் போது, சமூகத்தில் அவர்களுக்கு எவ்வளவு மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. 

குறிப்பு : இந்த அரிய புகைப்படம், கீழக்கரை தச்சர் தெருவில் இருக்கும் மூத்த சமூக ஆர்வலர். அலி பாட்சா மாமா அவர்கள் (அம்பலார் வீடு) இல்லத்தில் இருக்கிறது.  


குறிப்பு : தற்போது சிதிலமடைந்து கிடக்கும் இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியின் தலை வாசலில் தான், அரை நூற்றாண்டுக்கு முந்தையை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அஞ்சு வாசல் கிட்டங்கி வளாகத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டில் இங்கு நடை பெற்ற ஒரு கொலை சம்பவம், அந்த காலக் கட்டத்தில் கீழக்கரையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியில் வேலை பார்த்த ஒரு நடுத்தர வயது நபர், 10 வயது சிறுவனை கொலை செய்து, அந்த பிரேதத்தை, இந்த கிட்டங்கியில் உள்ள ஒரு பகுதியில் மறைத்து வைத்திருந்தார். 


அஞ்சு வாசல் கிட்டங்கியின் முதல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பாதை  

நாள் முழுவதும் சிறுவன் வீடு திரும்பாததால், துடித்துப் போன பெற்றோர்கள்  போலீசில் புகார் செய்தனர். சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் போலீசாரின் தேடுதல் வேட்டையில் அஞ்சு வாசல் கிட்டங்கியில் இருந்து பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கொலையாளி குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. 

போலீசார் குற்றவாளியை விரைந்து பிடிக்க வியூகம் வகுத்தனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் பல்வேறு நபர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மும்முரமாக நடந்தது. யுவராஜ் என்கிற பெயரில் ஒரு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்த கொலை செய்தி காட்டுத்தீ போல ஊரெங்கும் பரவியிருந்ததால் பொதுமக்கள் அதிகமானோர் இந்த பகுதியில் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தனர். 


பழைய தூசு படிந்த சங்குகளுடன் காட்சி தரும் அஞ்சு வாசல் கிட்டங்கியின் ஒரு அலமாரி 

அப்போது அந்த மோப்ப நாய் அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதியில் பிரேதம் இருந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு அங்கும் இங்கும் ஆக்ரோசமாக ஓடியது. திடீரெனெ அஞ்சு வாசல் கிட்டங்கியில் வேலை பார்த்த ஒரு நபரை கவ்விப் பிடித்தது.  

பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, கொலை எப்படி நடை பெற்றது என்பதை நடித்துக் காட்டினார்.பின்னர் போலீஸ் விசாரணையில் குற்றம் முற்றிலும் நிரூபிக்கப்பட்டு, வழக்கு நடை பெற்று சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவாக உருவெடுத்த பின்னர், கீழக்கரையை பொருத்தமட்டில் ஒரு கொலைக்கு சிறை தண்டனை பெற்றவர் இவரே முதலாமவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த கொலை சம்பவம் மற்றும் அது சார்ந்து பரப்பப்பட்ட ஆவி வதந்திகள் தான் இன்னும் இந்த பகுதியை சுற்றி சுற்றி வருகிறது. ஆனால் இன்னும் இங்கு காலை நேரங்களில் சங்கு தொழில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விசயமாகும். அது சம்பந்தமாக அடுத்த பதிவில் காண்போம்.

அஞ்சு வாசல் கிட்டங்கியின் முதல் பகுதியை வாசிக்க :


சரித்திர சேகரிப்பில் உதவி : வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா சுல்தான் அவர்கள் 

பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!    (தொடரும் >>>>)  

FACE BOOK COMMENTS :

Like ·  · Unfollow Post · Share · Edit
  • Seeni Ibrahim Ssh நல்ல தொகுப்பு தம்பி, நமதூர் செய்திகளுக்கு நன்றிகள் பல,,,
    4 hours ago · Like · 1
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை'கீழக்கரையின் பழைய நினைவுகளை வெளிக் கொணரும் அற்புதமான பதிவு. கீழை இளையவனுக்கு வாழ்த்துகள். இங்கு என்றோ ஒரு கொலை நடந்து விட்டது என்பதற்காக அஞ்சு வாசல் கிட்டங்கியை அமானுஷ்ய பகுதியாக பேசி வரும் மக்கள், பேய் பிசாசு கதைகளை தூக்கி வீசி விட்டு, இனியாவது இதன் சரித்திர முக்கியத்துவத்தை உணர தலைப்பட வேண்டும்.
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்
  • Imthiyaz Ahmed அற்புதமான அருமையான பதிவு தெரியாத பல சமாச்சாரங்களை தெரிந்து கொள்ள செய்து விட்டாய் இளையவா வாழ்த்துக்கள் நீ எழுதும் கட்டுரைகளில் தொடாத விசயமில்லை உன்னால் மட்டுமே எப்படி சாத்தியமாகிறது கீழக்கரை எழுத்தர்கள் உன்னிடம் கற்று கொள்ள வேண்டும்.உன் ஒவ்வொரு பதிவினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அடுத்த பதிவு எப்போது
    3 hours ago · Like · 2
  • Jahu Jotun 5 வாசல் கெட்டிங்கி பத்தி மிகவும் நல்ல செய்தி சொன்னிர்கள். நன்றி
    3 hours ago · Like · 1
  • சின்னக்கடை நண்பர்கள் Really good and excellent historical information about Anju Vaasal Kittanki. Thanks keelai ilayavan machan
  • Hamid Sahul very nice to know the historical news
  • Fouz Ameen நல்ல வரலாற்று தகவல் நண்பா. அமானுஷ்யம் மறைந்து, அஞ்சு வாசல் கிட்டங்கியின் உண்மை முகம் தெரிந்தது. அடுத்த தொடர்ச்சியை உடனே போஸ்ட் பண்ணுங்கள்
  • Keelakarai Ali Batcha இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்தபின் 1967 வரை மதராஸ் மாகாணத்தை (இன்றைய தமிழ் நாடு) காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்தது. அந்த காலக் கட்டத்தில் கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எஸ்.வி.எம்.முகம்மது ஜமாலுதீன் பிரதர்ஸ் வகையறாக்கள் ஆளும் அரசுடன் நெருக்கமாக மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். அதன் காரணமாக அடிக்கடி ஐந்து வாசல் கிட்டங்கிக்கு தமிழக ஆளுநர்கள்,முதல்வர்கள், ஏனைய அமைச்சர்கள், இவர்களை சார்ந்த அரசு உயர் அதிகார்கள் வருகை தந்தார்கள்.

    ஐந்து வாசல் கிட்டங்கியில் கடல் சார்ந்த பல தரப்பட்ட சங்குகள்,ஆழ் கடலில் 100 அடி ஆழம் வரை உயிர் காக்கும் எவ்வித உபகரணமின்றி மூழ்கி எடுத்த ஜாதி, பட்டி சங்குகள். கடல் சிப்பி,மிகச் சிறியச் சங்கு போல தோற்றம் அளிக்கக்கூடிய முத்துகள், பவளங்கள்,சோவிகள் முதலியவைகளை ஏக போகமாக வியாபாரம் செய்தார்கள்.

    முத்துகளால் செய்யப்பட்ட வகை வகையான் மாலைகள் வ்ட இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.அப் பகுதி ஏழை மக்கள் முத்துகளை வீட்டிற்கு வாங்கிச் சென்று மாலையாக கோர்த்து வந்து கூலி பெற்றுச் செல்வர்.அருமையான வேலை வாய்ப்பு. நிரந்தர வருமானமாகவும் இருந்தது.

    சுருக்கமாக சொல்லுவதென்றால் இன்று ராமேஸ்வரம் கோவில் கடைகளில் கிடைக்ககூடிய அனைத்து பொருட்களும் அன்று இந்த ஐந்து வாசல் கிட்டங்கியில் சங்கமம்..

    ஐந்து வாசலில் தெற்கு பக்கமுள்ள கடைசி வாசலின் உள்ளே நெல்,மாவு,மிளகாய் அரைக்கக்கூடிய அரவை மிஷின் ஒன்று இருந்தது அங்கு தான் கொலை நடந்தது. அது கீழக்கரை சரித்திரத்தில் பதிக்கப்பட்ட வ்ரலாற்று சம்பவம். கராணம் யுவராஜ் என்ற பெயரால் அழைக்கப்பட்ட மோப்ப நாய் ஒன்று வந்து கொலையாளியை பிடித்துக் கொடுத்தது அந்தக் காலக் கட்டத்தில் ஆச்சரியமான சம்பவம். அன்று ஊரே அல்லோலப்பட்டது.சுற்று வட்டார மக்களும் பஸ் போக்குவரத்து இல்லாமையால் கால் நடையாக வந்து கூடி விட்டர்கள்.

    இப் பதிவின் மூலம் நீண்ட நேரம் கடந்த கால மலரும் நினைவுகளில் மூழ்க வைத்த கீழை இளையவனுக்கு மனமார்ந்த நன்றி.உரித்தாகுக.