தேடல் தொடங்கியதே..

Saturday 4 May 2013

கீழக்கரையில் 'தீரன் திப்பு சுல்தான்' நினைவு தினம் அனுசரிப்பு - கீழக்கரை வரலாற்று ஆய்வுக் குழு ஏற்பாடு !


கீழக்கரையில் இந்திய விடுதலைப் போரின் முன்னோடியான 'தீரன் திப்பு சுல்தானின்' 213 ஆம் நினைவு நாள் (04.05.2013) இன்று, கீழக்கரை வரலாற்று ஆய்வுக் குழுவினரால் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வரலாற்று ஆய்வுக் குழு அமைப்பாளர். அ.மு.சுல்த்தான், செயலாளர் சீனி முஹம்மது தம்பி, நிர்வாகி முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தீரன் திப்பு சுல்தான் அவர்கள் கி.பி.1753 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாளன்று, கருநாடக தேவஹல்லி எனும் இடத்தில் அரசர். ஹைதர் அலி, இளவரசி பஹ்ருன்னிசா ஆகியோர்களுக்கு மகனாகப் பிறந்தார். 



இந்திய வரலாற்றில் தனக்கெனத் தன்னிகரில்லாத் தனிப் பெரும் பெருமைகளைத் தக்க வைத்துக் கொண்டோரில் 'மைசூர் வேங்கை' தீரன் திப்பு சுல்தான் முதன்மையானவர். இவர் மனித நேயமும், மத நல்லிணக்க செயற்பாடுகளையும் கொண்டவர். கி.பி. 1782 டிசம்பர் 26 ஆம் நாள் மைசூரின் ஆட்சியில் பொறுப்பை ஏற்ற போது, அவரின் ஆட்சி எல்லை, வடக்கே கிருஷ்ணா ஆறும், தெற்கே திருவான்கூரும், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்கே அரபிக் கடலும் இருந்தன. அவரின் தலை நகரம் சீரங்கப் பட்டினம்.

அ.மு.சுல்த்தான் வர்களின் கை வண்ணத்தில் உருவான ஓவியம் 



இளம் வயதிலேயே போர்ப் பயிற்சி பெற்ற திப்பு சுல்தான் அன்றைய காலக் கட்டத்தில், இந்தியா முழுமையையும் அடிமைப்படுத்த முற்பட்ட ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ஆங்கிலேயரின் என்னத்தை முன் கூட்டியே யூகித்த திப்பு சுல்தான் ஆங்கிலேயரின் திட்டங்களை முறியடிக்க உள் நாட்டு சக்திகளையும், வெளி நாட்டுத் துணையையும் ஒருங்குபடுத்தி, அன்னியரான, ஏகாதிபத்திய இன வெறி, மொழி வெறி கொண்ட ஆங்கிலேயரின் ஆதிக்கம், இந்திய தேசத்தின் எந்த மூலையிலும் கோலோச்சி விடக் கூடாது என்று முழு மூச்சுடன் போரிட்டார். 

மைசூரில் நான்காவது போரில் வலிமை வாய்ந்த ஆங்கிலேயப் படை மைசூரின் மீது வெறி கொண்டு பாய்ந்த போது, ஆங்கிலேயருக்கு அடி பணிய மறுத்த திப்பு சுல்தான், இறுதி வரை போரிட்டார். இறுதியில் கயவர்களின் காட்டி கொடுக்கும் தன்மையால், கி.பி.1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாளன்று, இதே நாளில் வீர மரணம் அடைந்தார். 

தீரன் திப்பு சுல்தான் அவர்கள் தன் ஆட்சி காலங்களில் பல தீர்க்கமான திட்டங்களை செயற்படுத்தினார். அவற்றுள் சில :

  • பூரண மது விலக்கை அமல் படுத்தினார். 
  • ஜமீன்தாரி முறையை ஒழித்து, உழவர்களுக்கு விளை நிலங்களை பகிர்ந்தளித்தார்.
  • சாமுண்டி மலைக் கோவிலில் நடந்து வந்த நர பலியை தடுத்து நிறுத்தினார்.
  • அடிமை வணிகத்தினை தடுத்தார்.
  • மங்களூரில் கப்பல் கட்டும் தொழிற்சாலையை நிறுவினார். 
  • கிருஷ்ன ராஜ சாகர் அணையைத் தொடங்கினார். 
  • நியாய விலைக் கடைகளைத் திறந்தார். 
  • ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், முதன் முறையாக ராக்கெட்டுகளை பயன்படுத்தினார். 
  • ஓமன் தலை நகரம் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை, இறக்குமதி செய்து, பட்டு உற்பத்தி செய்ய வழி கோலினார். 
  • ஒடுக்கப்பட்ட பெண்டிர், மேலாடை அணிய வலி வகை செய்தார். 
  • சமய பாகுபாடுகள் இன்றி, இந்து கோவில்கள், கிருத்தவ மாதா கோவில்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் உதவிகள் செய்தார். 
  • மேல் கோட்டை நாராயண சாமி கோவிலுக்கு 12 யானைகளைப் பரிசளித்தார். 
  • சிருங்கேரி சாரதா மடத்திற்கு, பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார் 
  • புலி வெண்ட்லாவில் உள்ளா தேவாலயத்தைப் புதுப்பிக்க உதவி செய்தார். 
  • இஸ்லாமியர்களுக்கென பல பள்ளிவாசல்களை கட்டினார்.

"இந்திய திரு நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும் உயிர் நீத்த தியாகிகளில் திப்பு சுல்த்தானுக்கு நிகராக எவரும் கிடையாது. வருமான இழப்புகளைப் பற்றி கவலைப்படாது, பூரண மது விலக்கை அமுல்படுத்திய திப்பு சுல்தான்.. ஓர் உன்னதமான மனிதர்."

-- காந்தியடிகள் -- 


இரத்தம் சிந்திய உடலோடும், ஆங்கிலேயர்களின் இரத்தம் குடித்த வாளோடும், நாட்டிற்காக தன்னுயிரை ஈந்த தியாகி மைசூர் வேங்கை தீரன் திப்பு சுல்தானின் தியாகங்களையும், மனித நேயம், வீரம், விவேகம், யூகம், அனைத்து சமய மக்களையும் அரவணைக்கும் பண்பு என அனைத்துத் தகுதிகளையும் ஒருங்கே பெற்ற திப்பு சுலதானின் தனித்துவத்தையும் இன் நன்னாளில் நினைவு கூறக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

வரலாற்றுத் தகவல் :
அ.மு.சுல்த்தான் - அமைப்பாளர், வரலாற்று ஆய்வுக் குழு, கீழக்கரை 
அலைப் பேசி எண் : 98655 69595

  • Keelai Ilayyavan இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் வெகு காலத்திற்கு முன்பே, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போரை வித்திட்ட மாவீரர் திப்பு சுல்தான் குறித்து இன்றைய தினம் நினைவு கூர்வது சிறப்பாக இருக்கும்.


    மைசூர் மன்னன் ஹைதர் அலியின் மகனான மைசூர்புலி (Mysore Tiger) என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தானால் (Tipu Sultan, 1750 – 1799) தயாரிக்கப்பட்டிருந்த உலகின் முதல் உலோக ராக்கெட் (Knows as Mysorean Rocket) கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருந்தது.

    20 சென்டி மீட்டர் நீளமும் 8 சென்டி மீட்டர் விட்டமும் கொண்ட இரும்புக்குழல்களுக்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு நான்கு அடி நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டப்பட்டு ஏவப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் (1800 AD) உலகிலேயே நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திப்புவினுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    திப்புவிடம் போரிட்டு வெல்ல முடியாது என்பதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயர்கள் திப்புவின் அண்டை அரசர்கலான திருவிதாங்கூர் சமஸ்தானம் (Kindom of Travancore), ஹைதராபாத் நிஜாம் (Nizam of Hydrabad), மராத்தியர்கள் (Maratha Empire) ஆகியோர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு லஞ்சம் என்ற சதிவலையை பின்னி திப்புவின் அமைச்சரான மிர் சாதிக்கை (Mir Sadiq) துரோகியாக மாற்றியது, இதன் பின்னரே திப்புவை ஆங்கிலேயர்களால் வெல்லமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment