தேடல் தொடங்கியதே..

Friday 25 May 2012

கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் குறித்த 'விழிப்புணர்வு பிரச்சாரம்' - SDPI கட்சியினரின் சிறப்பான முயற்சி !

மிழகத்தின் தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லையில் மட்டும் 24 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நம் கீழக்கரை அருகே உள்ள நத்தம் குளபதம் கிராமத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதனால் கீழக்கரை நகர மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த நோய் சிறு குழந்தைகளை அதிகம் தாக்குவதால், தற்சமயம் நம் பகுதி சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலே... டெங்கு காய்ச்சலாக இருக்குமோ ? என தாய்மார்கள் அஞ்சி வருகின்றனர். நம் பகுதி மருத்துவர்களும், காய்ச்சலால் அவதிப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் டெங்கு காய்ச்சலுக்கான இரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.


SDPI ன் சிறப்பான முயற்சி ! (இடம் - கருப்பட்டிக்காரத் தெரு, கீழக்கரை)


இந்நிலையில் கீழக்கரை நகர் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டியினர்  (SDPI), டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், டெங்கு பரவாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும்  அனைத்து தெருக்களிலும், கை ஒலிப்பெருக்கி மூலம் சிறப்பாக பிரச்சாரம்  செய்து வருகின்றனர். இதனை கீழக்கரை நகர் SDPI தலைவர் செய்யது அபுதாகிர் அவர்கள் முன்னிலை ஏற்று நடத்தி வருகிறார். இதற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.




டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
  • இது ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படும் காய்ச்சல்.
  • இவ்வகை காய்ச்சல் ஏடிஸ் இஜிப்டி வகை கொசு கடிப்பதினால் பரப்பப்படுகிறது.
  • இவ்வகை கொசு கடித்த 5 அல்லது 6 நாட்கள் கழித்து இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
  • இவ்வகை காய்ச்சல் இரண்டு விதத்தில் தோன்றும். ஒன்று டெங்கு காய்ச்சல், மற்றொன்று இரத்தப் போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல்
  • டெங்கு காய்ச்சல் ஒரு மோசமான நோய், ப்ளூ போன்று சுகாதார கேட்டினை விளைவிக்கும்.
  • இரத்தப்போக்குடன் கூடிய டெங்குகாய்ச்சல் மிகவும் மோசமான நோய். இவ்வகை காய்ச்சல் மரணத்தையும் விளைவிக்கும்.
  • டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் இருக்குமோ? எனத் தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 
  •  

    டெங்கு காய்ச்சலின் அடையாளம் மற்றும் அறிகுறிகள்
    • திடீரென மிக அதிகபப்டியான காய்ச்சல் ஏற்படுவது.
    • தாங்கிக் கொள்ள முடியாத முன் தலைவலி
    • கண்களின் பின்புறம் வலி தோன்றும். இது கண்களின் அசைவையும் கடினமாக்கும்.
    • தசை மற்றும் மூட்டுவலி ஏற்படும்.
    • ருசியை உணரும் தன்மை மற்றும் பசி ஏற்படுவது குறையும்.
    • மார்பு மற்றும் கைகளில் தட்டம்மை போன்று தழும்புகள் எற்படும்.
    • குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். 

    இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலின் அடையாள அறிகுறிகள்:
    • டெங்கு காய்ச்சலுக்கான அனைத்து அறிகுறிகளும் காணப்படும்.
    • தொடர்ச்சியான தாங்கிக்கொள்ள முடியாத வயிற்றுவலி.
    • சருமம் வெளிர்தல், சில்லிட்டுப்போதல் மற்றும் பிசுபிசுப்புத்தன்மை ஏற்படும்.
    • மூக்கு, வாய், பல் ஈறுகள் மற்றும் தோலில் உள்ள கொப்புளங்களிலிருந்து இரத்தம் வடிதல் ஏற்படும்.
    • இத்துடன் அல்லது இரத்தம் இல்லாமலோ அடிக்கடி வாந்தி ஏற்படும்.
    • தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை ஏற்படும்.
    • அதிக தாகம் ஏற்படும் மற்றும் நாக்கு வறண்டுபோகும்.
    • வேகமான (படபடவென) பலவீனமான இரத்த நாடி காணப்படும்.
    • சுவாசிப்பதில் கடினத்தன்மை ஏற்படும். 

      இந்நோய்தொற்றக்கூடிய காலம்

      டெங்கு காய்ச்சல் கண்ட நபரை கொசு கடித்தல், டெங்கு காய்ச்சல் கண்டவரிடமிருந்து வைரஸ் கிருமி கொசுவின் உடலில் 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் அக்கொசு மற்றொருவரை கடிக்கும் போது கொசுகடிபட்ட நபருக்கு டெங்கு காய்ச்சல் தோன்றுகிறது.

        டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் நபரின் வயது மற்றும் இனம்

        எல்லா வயதினர் மற்றும் இருபாலினருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். இரத்தப் போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது குழந்தைகள் இறப்பது மிக அதிகமாக காணப்படும்.

          டெங்கு/இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு நோய்பரப்பும் காரணிகள்
          • ஏடிஸ் இஜிப்டி வகை கொசு டெங்கு / இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலை பரப்புகிறது.
          • இது சிறிய கருப்பு வெள்ளை, வெள்ளை நிற கோடுகளை கொண்ட சுமார் 5 மில்லி மீட்டர் அளவிலான ஒரு கொசு
          • இந்த வகை கொசுக்களின் உடலில் 7 முதல் 8 நாட்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்கிறது. பின்னர் இந்நோயினை மற்றவருக்கு பரப்புகிறது. 

          கொசுவின் உணவுப்பழக்கம்
          • இவ்வகை கொசுக்கள் பகல் வேளைகளில் கடிக்கும்.
          • முக்கியமாக வீட்டிலும், வீட்டைச்சுற்றியுள்ள மனிதர்களின் இரத்தத்தை உட்கொண்டும் வாழக்கூடியவை.
          • திரும்பத் திரும்பக் கடிக்கும் தன்மை கொண்டவை.

          ஓய்வெடுக்கும் பழக்கம்
          • வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஓய்வெடுக்கும்.
          • வீட்டின் இருட்டான மூலைகள், தொங்கிக்கொண்டிருக்கும் ஆடைகள், குடைகள் அல்லது மேசைநாற்காலி போன்றவைகளின் அடியில் ஓய்வெடுக்கும்.

          இனப்பெருக்கம் செய்யும் முறை
          • ஏடிஸ் எஜிப்டி வகை கொசுவானது பாத்திரங்கள் மற்றும் நீரை சேமிக்கும் பாத்திரங்களில் மிக குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலும், தங்கள் இனப்பெருக்கத்தை செய்யும்.
          • இவ்வகை கொசுக்களின் முட்டைகள் ஓராண்டிற்க்கும் மேலாக தண்ணீர் இல்லாத சூழ்நிலையிலும் உயிரோடு இருக்கும் தன்மை கொண்டவை.

          இனப்பெருக்கத்திற்கு உகந்த இடங்கள்

          குளிர்ப்பானங்கள், பீப்பாய்கள், ஜக்குகள், பானைகள், வாளிகள், பூந்தொட்டிகள்(பிரிட்ஜ்), தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள், பள்ளங்கள், பாட்டில்கள், டப்பாக்கள், டயர்கள், கூரையில் உள்ள நீர் வடி பள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியிலிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், சிமெண்ட் கலசங்கள், மூங்கில் குடில்கள் (புட்டிகள்) தேங்காய் ஓடுகள், மரத்திலுள்ள துணைக் குழிகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள / சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் இவை தங்கள் இனப்பெருக்கத்தை செய்கின்றன.




          டெங்கு / இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல்.
          • டெங்கு நோய் வரும்முன் காப்பது சரியானது.
          • இவ்வகை நோய்களுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ இல்லை.
          • ஏடிஸ் இஜிப்டி வகை கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே இவ்வகை நோய்களை தடுப்பதற்கான சிறந்த முறையாகும்.
          • இவ்வகை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.சரியான சிகிச்சை முறையை கையாள்வதின் மூலம் உயிரிழப்பு நேரிடுவதை கணிசமாகக் குறைக்கலாம். 

          பரிசோதனைகள்:

          ரத்தப் பரிசோதனைகள் மிகவும் இன்றியமையாதவை. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அறிவதற்காக, ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு, ரத்தம் உறைவதற்கான நேரம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளைச் செய்யவேண்டும்.

          டெங்கு காய்ச்சல் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேறு சில பரிசோதனைகளைச் செய் வேண்டும். எக்ஸ்-ரே, ஸ்கேன் (வயிற்றுப் பகுதி) ஆகியவற்றை எடுக்கவேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க  வேண்டும்.
          • சோர்வாக இருத்தல் அல்லது ஆசுவாசப்படுத்த முடியாமல் அழுதல்.
          • ரத்தக் கசிவு (எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும்) கை கால்கள் நீலம் பூத்திருத்தல்.
          • உடல் சில்லிட்டுப்போதல்.வயிற்று வலி மிக அதிகமாக இருத்தல். ரத்த அணுக்கள் குறைவாக இருத்தல்.
          • நுரையீரலைச் சுற்றியோ, வயிற்றிலோ நீர் கோத்துக் கொள்ளுதல்,  ரத்த அழுத்தம் குறைவது,  நாடித் துடிப்பு சீராக இல்லாத நிலை, உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாத நிலை.

          சிகிச்சை:

          டெங்கு காயச்சலுக்கென பிரத்யேக மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல் குறைவதற்கு பாரசிடமால் கொடுக்க வேண்டும்.

          உணவு சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால், குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து சிவப்பு அணுக்களோ அல்லது வேறு இரத்த அணுக்களோ  ஏற்ற வேண்டும்.


          தடுக்கும் முறைகள்:

          * கொசுக்களை ஒழிக்க வேண்டும்.
          * வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
          * கொசு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
          * டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

          யா அல்லாஹ் ! என்னையும், எங்கள் குடும்பத்தாரையும், தெருவாசிகளையும், நகர மக்களையும் டெங்கு போன்ற கொடிய உயிர் கொல்லி நோய்களிடமிருந்து காப்பாற்றுவாயாக... எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக... ஆமீன் 

          கீழக்கரையில் பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற முகைதீனியா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா !

          தமிழகமெங்கும் கடந்த 22 ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் கடந்த வருடங்களை போல பெண்களே அனைத்து பாடங்களிலும் முன்னிலை வகித்தனர். நம் கீழக்கரை நகரிலும் பெண்களே பெருவாரியான பகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். இதில் முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்ற வடக்குத் தெருவைச் சேர்ந்த ஹாஜி. சுல்தான் செய்யது  மற்றும் ராசிகா பானு அவர்களின் மகளார். மிஸ்பாஹ் பாத்திமா 1161 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்று நகருக்கு பெருமை சேர்த்துள்ளார்.




          இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், வெற்றி பெற்ற மாணவிகளை மென் மேலும் ஊக்கப்படுத்தும் முகமாகவும்  வடக்குத் தெரு ஜமாஅத் கல்விக் குழு சார்பாகவும், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம்  மற்றும் கீழக்கரை நகராட்சி மன்றம் சார்பாகவும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா இன்று காலை 10.30  மணியளவில் முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.




          இந்த நிகழ்ச்சியில் வடக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ஜனாப். K.M.S. பசீர் காக்கா  தலைமை வகித்தார்கள். வடக்குத் தெரு ஜமாஅத் கல்விக் குழு உதவி தலைவர் ஜனாப். ரபீக் சாதிக் காக்கா மற்றும் உதவி செயலாளர் M.M.S முகைதீன் இபுறாகீம் காக்கா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் காக்கா மற்றும் கவுன்சிலர்கள் அன்வர் அலி, இடி மின்னல் ஹாஜா, அரூசியா பேகம், முகைதீன் இபுறாகீம், சாகுல் ஹமீது, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக தலைவர் தமீமுதீன், கீழக்கரை காவல் துறை சார்பு ஆய்வாளர் கார் மேகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



          பள்ளியின் முதல்வர். ரஹ்மத்து நிஷா அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர். ஜனாப். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் 'கல்வி மற்றும் IAS ஆட்சிப் பணி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்சிகளை பள்ளியின் துணை முதல்வர் திரு ஜனநாயக சேதுபதி தொகுத்து வழங்கினார்.





          மாணவி மிஸ்பாஹ் பாத்திமா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:

          தமிழ் : 186     ஆங்கிலம் : 189     கணினி அறிவியல்  : 195     பொருளியல்  : 194

          வணிகவியல்  : 198    கணக்குப் பதிவியல்  :  200



          பெற்றோருடன் சாதனை மாணவிகள் !

          ஆசிரிய பெருந்தகைகளுடன் சாதனை மாணவிகள்

          நம் நகரில் முதலிடம் பெற்ற மிஸ்பாஹ் பாத்திமா அவர்கள் கூறுகையில் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், தோழிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனக்கு  IAS படிக்க விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் இப்பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களை வென்ற மிஸ்பாஹ் பாத்திமா, மிஸ்பாஹ் ஆயிஷா, முஹம்மது ஹம்சா பாத்திமா ஆகியோர்களுக்கு, கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் காக்கா, வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் காவல் துறை சார்பு ஆய்வாளர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்


          வாழ்த்துக்கள்.... கனவுகள் விதையுங்கள் ! அறிவின் தோட்டத்தில்.. வெற்றியின் அறுவடை தூரமில்லை...

          Tuesday 22 May 2012

          கீழக்கரையில் முஹைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவி 1161 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் - 100 ச‌த‌வீத‌ தேர்ச்சியுடன் 2 பள்ளிகள் !

          நம் கீழக்கரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் + 2 தேர்வுகளை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர் கால பாதையை தீர்மானிக்கும் விதமாக இன்று காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.  இது வரை பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி மிஸ்பாஹ் பாத்திமா 1161 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.




          இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய‌ இரு ப‌ள்ளிக‌ளும் 100% ச‌த‌வீத‌ம் தேர்ச்சி பெற்றுள்ள‌து. இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் மாணவி ஆயிசத்துல் ஹப்ஸா அதிக மதிப்பெண்ணாக‌ 1151 பெற்றுள்ளார். கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அதிக மதிப்பெண்ணாக 1118ம் 98 % ச‌த‌வீத‌ தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ள‌து.




          ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாணவி அதிக ‌ம‌திப்பெண்ணாக‌ 1154 பெற்றுள்ளார் 95% தேர்ச்சியை இப்ப‌ள்ளி பெற்றுள்ள‌து. ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 220மாணவிகளில் 220மாணவிகள் தேர்வு பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில்அதிக மதிப்பெண்னாக‌ 1128 மாண‌வி பெற்றுள்ளார்.




          வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

          Monday 21 May 2012

          கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

          கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம். மு.மு.க. முஹம்மது  சேக்னா லெப்பை அவர்களின் மகளும், ஜனாப். L.M.K.சேகு முதலியார் சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹூம். முஹம்மது ஐதுரூஸ், ஜனாப். மு.மு.க.முஹம்மது அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், ஜனாப் அஹமது அஸ்லம் அவர்களின் தாயாரும் ஜனாப். அபு என்கிற செய்யது அபுதாகிர் அவர்களின் மாமியாரும், ஜனாப். அய்யூப் கான் அவர்களின் சிறிய தாயாருமான மு.மு.க.சித்தி ஹதீஜா பீவி அவர்கள் இன்று இரவு சுமார் 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)


          அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் சேகு அப்பா பள்ளி மைய வாடியில் நாளை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

          கிழக்குத் தெரு சேகு அப்பா பள்ளியின் அறிவிப்பு பலகை

          தொடர்புக்கு : 

          ஜனாப். அஹமது அஸ்லம்    -   90033 18071
          ஜனாப். அபு என்கிற செய்யது அபுதாகிர் காக்கா -    9942042516

          தமிழகமெங்கும் இன்று வெளியாகும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - இணைய தளங்களில் காண ஏற்பாடு !

          பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.22 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். நம் கீழக்கரை நகரிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் 2 தேர்வு மையங்களில் சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.




          சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இந்தப் பணி ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இன்று (22.05.2012 - செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

          தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் ஏதேனும் ஒரு  இணையதள முகவரியை கிளிக் செய்து காணலாம்.








           விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பம்:

          பிளஸ் டூ விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பம் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின் வரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.



            • பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் 30ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
            • விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு தேர்வுகள் இணை இயக்குனர் அலுவலகம் (புதுச்சேரி) ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். டி.பி.ஐ. வளாகத்தில் விற்பனை கிடையாது.
            • விடைத்தாள் நகல் எந்த ஒரு பாடத்திற்கும் கேட்டு விண்ணப்பிக்கலாம். மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.550 கட்டணம் செலுத்த வேண்டும். இதர பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணம் ஆகும்.

            மறு கூட்டல், மறுமதிப்பீடு:
            •  அனைத்து பாடங்களுக்கும் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறு கூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைத்த பிறகு விரும்பினால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
            • மறு கூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு தலா ரூ.305 கட்டணம். இதர பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம். விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கான கட்டண தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட டி.டியை நேரில் ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
            • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அலுவலகங்களில் மட்டுமே நேரில் ஒப்படைக்க வேண்டும்.
            •  

              • விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டுக்கு அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
              • மறுமதிப்பீடு கட்டணம் முதன்மை மொழி மற்றும் ஆங்கில மொழிப்பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1010 கட்டணம். மற்ற பாடங்களுக்கு தலா ரூ.505 கட்டணம். மறுகூட்டலுக்கு முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு ரூ.305 கட்டணம். இதர பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் ஆகும.
              • விடைத்தாள் நகல், மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் யாரும் மாணவர்களையோ அல்லது அவர்களின் பெற்றோர்களையோ தொடர்பு கொண்டு தவறான வழிகாட்டுதல் அளித்து மார்க்கை அதிகரித்து தருவதாக கூறினால், அதை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் வசுந்தராதேவி கூறியுள்ளார்.

              பெயிலாகும் மாணவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத் தேர்வு:
              • பிளஸ் டூ தேர்வில் பெயிலாகும் மாணவர்கள் இந்த வருடமே கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் உடனடி சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
                • இதற்கான விண்ணப்பங்கள் 23ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
                • அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.85, 2 பாடங்களுக்கு ரூ.135, 3 பாடங்களுக்கு ரூ.185, 4 பாடங்களுக்கு ரூ.235, 5 பாடங்களுக்கு ரூ.285, 6 பாடங்களுக்கு ரூ.335 கட்டணமாகும்.


                  • 2012 மார்ச் மாதம் தேர்வு எழுதி பெயிலான பள்ளிக்கூட மாணவர்கள் எஸ்.எச். என குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை அவர்கள் படித்த பள்ளியில் பெற்று பூர்த்தி செய்து 28ம் தேதிக்குள் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.

                  பிளஸ் 2  தேர்வு முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.