தேடல் தொடங்கியதே..

Monday 27 August 2012

கீழக்கரையில் தொடரும் இருசக்கர வாகன விபத்துக்களால் உயிரிழப்புகள் - தலை காயத்தை தவிர்க்க மீண்டும் 'ஹெல்மெட் விழிப்புணர்வு' !

சாலை விபத்து முக்கியமான உயிர்க்கொல்லி நோயாக உலகளவில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. நம் கீழக்கரை நகரிலும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப, விபத்துக்களும் மிக அதிகமாக நடந்த கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், கீழக்கரை நடுத்தெரு ஜமாத் ஆடறுத்தான் தெருவை சேர்ந்த காதர் மீரா சாகிப் என்பவரின் மகன் செய்யது சாகுல் ஹமீது (வயது 22) இரவு பைக்கில் இராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆர் எஸ் மடை அருகே விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன் தினம் காலமானார். 




இதே போல் தினமும் பலர் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடியுங்கள். பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்" என காவல் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் நம் கீழக்கரையில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு, மூன்று விபத்துக்களாவது நடந்து விடுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் வாரத்தில் நான்கைந்து பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.

இருப்பினும் நம் கீழக்கரை பகுதியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு கடந்த மார்ச் மாதம் மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினரும் காவல் துறையினரும் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி நடத்துவதாக இருந்தது. 

மொத்தமாக மூன்று ஹெல்மெட்கள் மட்டுமே இருந்ததால் பேரணி கை விடப்பட்டது. இப்போது பல்வேறு கோர விபத்துக்களை கீழக்கரை மக்கள் சந்தித்த பின்னர், மீண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. நம் உடல் உறுப்புகளை செயல்படுத்தும் ஒட்டு மொத்த கன்ட்ரோல் நம் தலையில் இருக்கக்கூடிய மூளையாகும். இதன் மொத்த எடை 1.5 கிலோ ஆகும். 100 கிலோவிற்கு மேல் உள்ள மனிதனுக்கும் இதே அளவுதான். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கும் திறன், அனுமானித்தல், கேட்டறிதல், செயல்படுத்துதல், கட்டளையிடுதல், செக்ஸ் உணர்வுகள் போன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை செய்வது இந்த மூளைதான்.

இந்த மூளையை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் தலையாய கடமையாகும். இந்த மூளை அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்தில் தான். 50 சதவீத சாலை விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவு, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது தான் முக்கிய காரணங்களாகும்.

பல ஆயிரங்கள் கொடுத்து, தனக்கு பிடித்த மாடல் பைக்குகளுக்காக  மட்டும் பல மாதங்கள் காத்திருந்து வாங்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒரு ஆயிரம் செலவழித்து ஹெல்மெட் வாங்க முயற்சிப்பதில்லை.

ஹெல்மெட்டுகளை கடன்காரன் தான் அணிந்து ஊருக்குள் நடமாடுவான். எங்களுக்கு தேவையில்லை என்று எகத்தாளம் பேசுபவர்களும் உண்டு. ஹெல்மெட் அணிவதை கேவலமாகவும், கவுரவ குறைச்சலாகவும் பார்ப்பது வருத்தத்திற்குரியது. ஆகவே 'வரு முன் காப்பது' சாலை விபத்தினால் ஏற்படும் மூளைக்காயத்திற்கு சாலச்சிறந்தது.

இது குறித்து கீழக்கரை காவல் ஆய்வாளர் இளங்கோவன் அவர்கள் கூறும் போது, "நமது கீழக்கரை நகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் மட்டுமே என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதிலும் சில பேர்கள் ஹெல்மெட்டை வண்டியில் மாட்டி விட்டுட்டு தான் ஓட்டுறாங்க.  இந்த இரு சக்கர வாகனங்கள் ஓட்டி ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலும் தலைக்காயத்துனால தான் நிறைய உயிர் பலிகள் நடக்கிறது.  தலைக்காயத்தை முழுமையாக தடுக்கவே  இந்த ஹெல்மெட். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாது ஹெல்மெட் அணிய வேண்டும்." என்று தெரிவித்தார். 

இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக இணைச் செயலாளர் செய்யது சாகுல் ஹமீது அவர்கள் கூறும் போது "தினந்தோறும் நாளிதழ்களில் இரு சக்கர வாகன விபத்துக்களில் பலியாகிறவர்கள் பற்றி செய்திகள் வரும் போது  'ஹெல்மெட் அணியவில்லை' என்று அடைப்புக் குறியிட்டு செய்தி வெளியிட்டிருப்பார்கள். அதற்கான காரணம் இது போன்ற விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி இறந்து விட்டார்கள் என்றால் இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பு ஆகாது. அதாவது இன்சூரன்ஸ் பணம் தர மாட்டாங்க.

அதற்கு அத்தாட்சியாகத் தான் அந்த பேப்பர் நியூஸ். ஹெல்மெட் போட்டிருந்தா மட்டும் தலையில அடிபடாமலா இருக்கப் போகுது? என வியாக்கியானம் பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அதேல்லாம் கவனத்துல எடுத்துக்காம நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

இரு சக்கர வாகன ஓட்டிகளை சிந்திக்கத் தூண்டும், அதிரை நண்பர் சபீர் அவர்களின் வைர வரிகள் இதோ :

நண்பனே
வேகம்  குறை…
உன்னை விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்..!


உன் பைக்கில்
உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?


உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்,
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம் ??

விவேகத்தைக் காட்டு..
வேகத்தைக் கூட்டாதே...

2 comments:

  1. ஒரு மூத்த குடிமகனனின் உள்ளக் குமுறல்:

    சென்று வா வாகை சூடி வென்று வா என வாழ்த்தி வழி அனுப்பி இமை மூடாது வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் உந்தன் சொந்த உறவுகளுக்கு காலான் கொண்டு சென்று விட்டான் என்ற துயரச் செய்தி வந்தடையும் போது அவர்களின் நிலையை ஒரு கணமாவது சிந்தித்திருந்தால் தலை கவசம் அணிய மறுத்திருக்க மாட்டாய். மறந்திருக்கவும் மாட்டாய்.

    உன்னுடைய மறைவு கூட சில காலத்தில் மறைந்து உன் நினைவுகள் மட்டும் நீணட நெடுங்காலம் மனதை நெருடிக் கொண்டிருக்கும்.நீயோ வாலிபனாக இருக்கும் பட்சத்தில். உன்னுடைய மறைவோ அல்லது விபத்தில் முடமாகி வீட்டிலேயே அடைப்பட்டிருக்கும் காலக் கட்டத்தில், உன்னையே நம்பி இருக்கும் உன் வீட்டு குமர்கள் விடும் மூச்சு காற்றில் வீட்டு ஜன்னல் கம்பிகளெல்லாம் துரு பிடிப்பதை பற்றி ஒரு கணமாவது சிந்தித்திருந்தால் தலை கவசம் அணிய மறுத்திருக்க மாட்டாய், மறந்திருக்கவும் மாட்டாய்.

    எனது அருமை இளைய சமுதாயமே. தலை கவசத்தை வாங்கிய காலத்திலிருந்து இடைவெளி இல்லாது அணியவா கட்டாயப்ப்டுதுகிறார்கள்? பயனிக்கும் நேரத்தில் பல நிமிடத் துளிகளோ அல்லது சில மணித் துளிகளோ தானே தலை கவசம் அணியச் சொல்லுகிறார்கள், அதிவும் உங்களின் சீரிய நன்மைக்குத்தானே.ஏன் இந்த வறட்டு பிடிவாதம்? இறைவன் நமக்களித்த புத்தியை கொண்டு கண நேரம் சிந்தித்தால் தலை கவசம் அணிய மறுக்க மட்டோம், மறக்கவும் மாட்டோம்.

    வாலிபத் திமிரில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்யும் உங்களுக்கு முதுமை காலத்தில் மிச்சுவது தண்டு வட தேய்மானம்தான்.இது எந்தனின் அனுபவ் உண்மை.

    காலத்தின் கட்டாயம். கீளை இளையவனின் இநத விழிப்புணர்வு தூண்டுதல்.எவ்வளவு பாரட்டினாலும் நிறைவு காண முடியாது.

    ReplyDelete
  2. விழிப்புணர்வு தூண்டுதல் மட்டும் போதவே போதாது.சில நேரங்களில் சில விஷயங்களில் சட்டமும் தன் சாட்டையை கடுமையாக சுழற்ற வேண்டும். போக்குவரத்து காவலர்களை உடனடியாக நியமித்து சட்ட நடவடிக்கைகளை பாரபட்சம் இல்லாது தொய்வில்லாது கடுமையாகச் செயல்பட்டால் ஓரளவுக்கு நிலமை சீராக வாய்ப்புண்டு.

    தலை கவசம் என்பது தாயின் அரவணைப்பு போன்றது என மனதளவில் உணர்ந்து அதை அணிய மறுக்க மாட்டோம், மறக்கவும் மாட்டோம் என இந்த கணம் முதல் சங்கல்பம் செய்வோம்.வல்ல நாயன் ந்ம் அனைவரையும் காத்தருள்வானாக, ஆமீன்

    இனியும் இது போன்ற கோரச் சம்பவங்கள் நம்மவர்களுக்கு நிகழாது இருக்க நம்மை எல்லாம் படைத்து, காதது ரட்ஷித்து அருள்பாலிக்கும் அந்த வல்லமை மிக்க நாயன் இடத்திலேயே மனமுருக இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போமாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

    மனதில கொள்க: சிகை அலங்காரத்தை சிதைக்கும் அற்ப பொருள் என மமதை கொண்டு தலை கவசம் அணிய மறுப்பீர்களானால் விபத்தில் தலை காயம் ஏற்படும் படசத்தில் முதலில் சிதைக்கப்படுவது சிகைதான்.

    ReplyDelete